Sunday, November 13, 2011

தொடர் -3 மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் உருவாக்குவது எப்படி?



பாத்தியில் முளைத்துள்ள செடிகள்

இப்போதெல்லாம் திருமண விழாக்கள், வேறு சில விற்பனை நிறுவனங்கள் கூட அங்கு நாம் செல்லும் போது மரக்கன்றுகளை இலவசமாக தருகிறார்கள். இப்போது இப்படி மரக்கன்றுகளை வழங்குவது முக்கிய சடங்காகவே மாறி விட்டது. இப்படி பெரிய அளவிலான விற்பனை மையங்களுக்கும், விழாக்களுக்கும் தேவைப்படும் மரக்கன்றுகளை சில நர்சரிகளில் இருந்து தான் பெறுகிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற மரக்கன்றுகள் அதிகம் தேவைப்படும். எனவே மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் உருவாக்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம். அதற்கு முன் கடந்த பதிவின் தொடர்ச்சியாக பொது இடங்களில் வைக்கப்படும் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்கும் மரக்கன்றுகள் பெரும்பாலும் காம்பவுண்ட் சுவருக்குள் வளர்க்கப்படுவதால் தொல்லைகள் இல்லை. ஆனால் பொது இடங்களான பூங்காக்கள், சாலை ஓரங்களில் வளரும் மரங்களை ஆடு, மாடுகள் தின்று விட வாய்ப்புண்டு. இதனால் இது போன்ற இடங்களில் வளர்க்கும் மரங்களை சுற்றி செங்கலை வைத்து சுவர் எடுப்பது பாதுகாப்பானது. ஆனால் இது போல் செங்கல் சுவர் எடுக்க அதிக செலவாகும். சிலர் இந்த செங்கல்லையும் கூட எடுத்து போய் விடுவார்கள். எனவே இதற்கு பதிலாக மெல்லிய கம்பி கொண்டு வலை போன்ற அமைப்பை செய்து வைக்கலாம். டயமண்ட் மெஸ் எனப்படும் இந்த வலைகள் பெரிய செலவு ஆகாது. 4 சவுக்கு கம்புகளை நட்டு அதைச்சுற்றி இந்த வலையை சுற்றி விடலாம்.

நட்ட மரங்களை பராமரிக்கும் முறை
வீட்டு தோட்டங்களில் வளரும் பழ மரங்களை அவ்வப்போது தேவையில்லாத பட்டுப்போன இலை, காம்புகளை கழித்து வருவது நல்லது. இதனால் மரங்கள் அழகாக தோற்றமளிக்கும். உதிர்ந்த இலைகளை சேர்த்து உரமும் தயாரிக்கலாம். வீட்டின் முகப்பில் இருக்கும் மரங்கள் வளரும் போதே நமது கற்பனைக்கு தகுந்தபடி இழுத்துக்கட்டியும், வளைத்தும், நிமிர்த்தியும் வேண்டிய வண்ணம் அழகுபடுத்த முடியும். 

பாட்டில் பிரஷ் என்று ஒரு மரம் உண்டு. வீட்டு தோட்டத்தில் இவற்றை வளர்க்கும் போது தோட்டத்தில் 5 அடி நீளத்திலும் 3 அடி அகலத்திலும் சிறிய செயற்கை நீர் நிலை போல் உருவாக்கி அதற்கருகில் இந்த மரங்கள் இருக்குமாறு செய்தால், மிக அழகாக வளைந்து நீரை தொடும் இவற்றின் கிளைகள் மனதுக்கு ரம்மியமாக இருக்கும். 
பழமரங்களையும், அழகு மரங்களையும், நிழல் தரும் மரங்களையும் வளர்ப்பதற்கு நமது நாட்டில் தனித்தனியே இடங்களை ஒதுக்குவது அவசியம். இதற்கு அரசாங்கம் தனியே திட்டம் ஒதுக்க வேண்டும். 

இப்படி ஒதுக்கப்படும் இடங்களில் மாலை நேரத்தில் ஓய்வு பெற்றவர்கள் பொழுதை கழிக்க பயன்படுத்தலாம். இந்த இடங்களில் நல்ல காற்று கிடைப்பதால் உடலுக்கு நல்லது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில் இது போன்று பலவகை மரங்கள் கலந்த விரிந்து பரந்த தோட்டத்தை உருவாக்கி வைக்கலாம். இந்த தோட்டங்களில் வந்து பார்க்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மரம், செடி, கொடிகளின் மீது ஆர்வம் ஏற்படும். மருத்துவமனைகளில் நடும் போது நோயாளிகளுக்கு நல்ல தூய்மையான காற்று கிடைக்கும். 

ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் உருவாக்க
நாற்றங்கால்
தேர்வு செய்யப்படும் மண் நல்ல வளமுடன் இருக்க வேண்டும். உங்களது நிலத்தில் என்ன வகையான சத்துக்கள் இருக்கிறது என்பதை கண்டறிய அருகில் உள்ள விவசாய அலுவலகத்தில் சென்று மண் மாதிரியை கொடுத்து பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களை எல்லாம் கண்டறிந்து கொள்ளலாம். இதனால் எந்த சத்துக்குறைபாடாக இருக்கிறது, எது அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உரங்களை இட்டு மண்ணின் வளத்தை நடுநிலைப்படுத்திக் கொள்ளலாம். செடிகளை உண்டாக்க தேர்வு செய்யப்படும் இடமானது களிமண் நிலமாக இருக்கக்கூடாது. அது போல் கடுமையான வெயில் இருக்கும் பட்சத்தில் நாற்றங்கால் அமைக்கும் போது தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் வெயில்தடுப்பு வலைகளை பயன்படுத்தலாம்.
 
எரு போடும் விதம்
தேர்வு செய்யப்பட்ட இடத்தை நன்றாக மண்வெட்டி கொண்டு கொத்தி விட வேண்டும். இப்படி கொத்தப்பட்ட நிலத்தில் சாணம், தழைஉரம் கலந்த எருவை இட வேண்டும். இதனால் அங்கு முளைக்க வைக்கப்படும் கன்றுகளை பிடுங்கும் போது பெரிய அளவுக்கு செடிகளுக்கு அதிர்ச்சி ஏற்படாது. கடினமான மண்ணில் முளைத்திருக்கும் கன்றுகளை பிடுங்கும் போது அந்த செடிகளுக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்படும். செடிகள் உண்டாக்குவதற்கு முதலில் பாத்திகளை உருவாக்க வேண்டும். இந்த பாத்திகள் என்பது வரிசையான ஒரு மண்குவியல் அமைப்பு என்று வைத்துக் கொள்ளலாம். இந்த பாத்திகள் கிழக்கு மேற்காக 25 அடிக்கு 5 அடி அகலமாக இருக்கலாம். அதில் 6 அங்குலத்திற்கு ஒரு விதை என்ற கணக்கில் ஏறக்குறைய 500 கன்றுகளை உருவாக்கலாம். 
 

விதை போடும் விதம்
ஆறு அங்குலத்திற்கு ஒன்றாக விதை ஊன்றி மண்ணால் மூடவேண்டும். மேல் உரை கடினமாக உள்ள விதைகளை சாணக்கரைசலில் ஊற வைத்து போடுவது நல்லது. சில விதைகளை வெயிலில் வைத்து சூடாக உள்ள தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பிறகு விதைக்கலாம். விதையிட்ட பின், தினமும் காலையில் நீர் விட வேண்டும். நடுப்பகலில் செடிகளில் ஒளிச்சேர்க்கை நடப்பதால் மாலைக்காலத்தை விட காலையில் நீர் விடுவதும் நல்லது. 
களை எடுக்கும் விதம்
புல் பூண்டு இல்லாமல் அவ்வப்போது களைகளை எடுக்க வேண்டும். களை பிடுங்காது, நீர்விடுவதில் கவனம் செலுத்தினால் கன்றுகளை காட்டிலும் களைகள் மண்டிவிடும். பருவமழைக்கு பிறகு விதை போடுவது ஏற்ற காலமாகும்.

 
நாற்று நடும் விதம்
நாற்றுக்களை பிடுங்கி பாலீதின் கவரில் மாற்றும் போது அல்லது வேறு இடத்தில் கன்றுகளை நடும் போது, செடிக்கன்றில் வேரில் மண் இருக்குமாறு எடுக்க வேண்டும். இப்படி ஒரு பாத்தியில் இருந்து எடுக்கப்பட்ட கன்றை வேறு பாத்திக்கு மாற்றி வெயில் காலம் முடியும் வரை போதிய அளவு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். மழைக்காலத்தில் இதே பாத்தியில் வளர விட்டு விட்டு பிறகு மற்றொரு பாத்திக்கு மாற்றி வளர்க்க வேண்டும்.

இப்போது கன்று ஒரளவு வளர்ந்திருக்கும் என்பதால் மூன்றடிக்கு ஒரு கன்றாக வேறொரு பாத்தியில் நட வேண்டும். இரண்டு முறை பிடுங்கி நடுவதால் கன்றுக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் அது சமாளிக்க பழகி விடும். இதற்கடுத்து இந்த பாத்தியிலிருந்து எடுத்து பாலீதின் கவரில் போட்டு விற்பனைக்கு அனுப்பலாம்.  கன்றுகளை பிடுங்கி நிலத்தில் நடும் முன் கவரில் இருந்தோ, பாத்திகளில் இருந்து எடுக்கும் போதோ நீர் விட்டு அறுந்து போகாமல் சிறிது மண்ணுடன் எடுக்க வேண்டும் என்பது முக்கியமானது.
 
பனியில் இருந்து பாதுகாப்பு
கன்றுகளை சிறிது மூடி வைப்பதாலும், நீர் விடுவதாலும், மண்ணைக்கிளறி விடுவதாலும் மூடுபனியின் கொடுமையிலிருந்து செடிக்கன்றுகளை பாதுகாக்கலாம். இப்படி வளர்த்து பாதுகாத்து எடுக்கப்படும் கன்றுகள் நட்ட முதல் ஆண்டிலேயே நன்றாக வேர் விட்டு கிளைத்து விடும்.

அடுத்த பதிவில், பெருங்சாலைகளுக்கு ஏற்ற மரங்கள் எவை என்று பார்க்கலாம்.

No comments:

Post a Comment