Friday, November 11, 2011

விவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்


வேளாண்மை உற்பத்தி திறனையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க அரசால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வேளாண் வளர்ச்சியானது, நீரினை பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதில் அடங்கியுள்ளது. இதனை அடைந்திட பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு எளிதாக கிடைத்திட நீர் வள அமைப்புகளை வலுப்படுத்துவதும் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளை ஒருங்கிணைப்பதும் அவசியமாகிறது.
இதனை கவனத்தில் கொண்டு நீர்வள நிலவள திட்டம் அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயிரிடும் பயிர்களுக்கு ஜீவநாடியாக உள்ள பாசன கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நீர்வள நிலவள திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாசன நிலங்களுக்கு முதுகெலும்பாக உள்ள பாசன உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பதுடன், பாசன கால்வாய் அமைப்புகளை புணரமைத்து அதன் பழைய நிலைக்கு கொண்டுவருதல் மற்றும் குளங்களை புதுப்பிப்பது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும்.
முக்கிய நோக்கங்கள்
நவீன நீர்சேமிப்பு பாசன தொழில் நுட்பங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாசன சேவை முறையை மேம்படுத்துதல்
நீர் பயனீட்டாளர் சங்கம் அமைத்தல் மற்றும் நீர்வள மேலாண்மையில் விவசாயிகளை ஈடுபடுத்துதல்
வேளாண்மை தீவிரப்படுத்துதல் மற்றும் மாற்று பயிர் சாகுபடி செய்தல்
62 உபவடி நிலங்களில் உள்ள பாசன அமைப்புகளை கொண்டு பயன்பெறும் பாசன பரப்பை அதிகரித்தல் மற்றும் பாசனத்தை உறுதி செய்தல்
வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்தல் மற்றும் பயன்பெறும் உழவர்களின் வருவாயை அதிகரித்தல்
வேளாண்மையை சார்ந்த இதர தொழில்களான மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவைகள் மூலம் பண்ணை வருவாயை அதிகரிக்க செய்தல்
விற்பனை செய்யும் வகையில் மகசூலை பெருக்குவது மற்றும் விளைபொருட்களை அதிகமாக சந்தைக்கு கொண்டு வர செய்தல்
இந்த திட்டத்தின் கீழ் நீர்வள ஆதார துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை விற்பனை துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வள துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன.
திட்டப்பணிகள்
பாசன அமைப்புகளை நவீனப்படுத்துவதின் கீழ் இந்த திட்டம் இரண்டு உட்பணிகளாக செயல்படுகின்றன.
நீர் சேதாரத்தை குறைக்கவும் மற்றும் ஏரியிலிருந்து நீரினை கொண்டுவரும் திறனை மேம்படுத்தவும் தேவையான சீரமைப்புகளை மேற்கொள்ளுதல்
வரத்து கால்வாய்களை சீராக்குதல் மற்றும் தூர்வாருதல் மூலமாக நீர்நிலைகளின் கொள்ளளவை மேம்படுத்துதல்
அதிக உபயோக வட்டாரங்களில் நிலத்தடி நீரினை சேகரிக்கும் கட்டமைப்பை அமைத்தல்
சுற்றுச்சூழலை கணித்தல் மற்றும் உபவடி நிலங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க ஆய்வு மேற்கொள்வது
பாசன வேளாண்மைக்கான அமைப்பினை நவீனப்படுத்துதல்
நவீன முறையில் திறமையான வரைமுறைக்குட்பட்ட பாசன சேவையை அளிப்பதே நோக்கம். இது தொடர்பான பணிகள் நீர்வள ஆதார துறை மற்றும் பாசன நீர் பயனீட்டாளர்கள் சங்கம் மூலமாகவும் செயல்படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட பகுதியின் நீர் ஆதாரங்கள் முக்கிய நீர் பயனீட்டாளர் சங்கங்களுடன் விவாதித்து வடிவமைத்து மேம்படுத்தப்படும்.
நீர்வள ஆதார துறையில் உள்ள அனைத்து அலுவல்களையும் இணைய தளம் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கப்படும்.
விவசாயிகளுக்கு பயிற்சி,சுற்றுலா மற்றும் கருத்தரங்குகள் நடத்த ஆதரவளிக்கப்படும்.
விவசாயிகள் பங்கு கொள்ளும் பாசன மேலாண்மை மற்றும் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பயிற்சி பிரிவுகளை அமைத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்காக பாசன ஆராய்ச்சி நிதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இந்த திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

No comments:

Post a Comment