Monday, November 14, 2011

தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்



தென்னையின் மகசூல் குறைவிற்கு சத்துப்பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கின்றன. தென்னையை காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, கருந்தலைப்புழு மற்றும் ஈரியோபைட் சிலந்திகள் தாக்கி மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்
* காண்டாமிருக வண்டின் தாக்குதல் இருந்தால் நன்றாக வளர்ந்த ஓலைகள், முக்கோண வடிவில் விசிறி போன்றும் ("வி' வடிவில்) நடுக்குருத்து ஒன்றாக சேர்ந்தும், நடுக்குருத்தின் அடியில் சக்கை ஒட்டிக்கொண்டும் இருக்கும்.
* அடிமரத்தில் பழுப்பு நிறத்தில் சாறு வடிதல், உள்இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் நுனிப்பகுதியில் உள்ள நடுக்குருத்து மெதுவாக வாட ஆரம்பித்தல் போன்றவை சிவப்பு கூன்வண்டின் தாக்குதலாகும்.
* இலைகள் பச்சையமின்றி நெருப்பில் கருகியது போன்றும், தாக்கப்பட்ட இலைகளின் அடியில் கழிவுகள் இருப்பதும் கருந்தலைப் புழுக்களின் அறிகுறிகள்.
* தேங்காய் நெற்று சொரசொரப்பாக இருப்பது ஈரியோபைட் சிலந்தியின் தாக்குதலாகும்.

ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டுமுறைகள்
* ஒரு மரத்திற்கு யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ், 3.5 கிலோ என்ற அளவில் வருடத்திற்கு ஒருமுறை உரமிட வேண்டும்.
* 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
* நுண்ணூட்ட உரமான போராக்சை 50 கிராம் என்ற அளவில் ஒரு மரத்திற்கு இடவேண்டும்.
* மடிந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்துவிட வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டின் இனப்பெருக்கத்திற்கு உகந்த இடமாகிவிடுகிறது.
* தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும்பொழுது அவற்றில் இருக்கும் புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும்.
* பச்சை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்துவிட வேண்டும்.
* விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.
* ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண் பானைகளில் ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
* கரும்புச் சர்க்கரைப்பாகு 2.5 கிலோ (அ) கள் 2.5 லிட்டருடன் அசிடிக் அமிலம் 5 மில்லி, 5 கிராம் ஈஸ்ட் மாத்திரையை இவற்றுடன் நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கிய முப்பது தென்னை மட்டைகளை ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* ரைனோலூர், பெரோலூர் இனக்கவர்ச்சிப் பொறிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
* பச்சை தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து கள்ளில் நன்கு தேய்த்து தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* மரத்தில் சேதம் ஏற்படாமல் முடிந்தவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து வண்டுகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
* பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்கு சோதிக்க வேண்டும். அரைமீட்டர் நீளமுள்ள குத்தூசி கொண்டு மடல்களுக்கும், குருத்துகளுக்கும் இடையே செருகி வண்டு இருப்பதை சோதித்து இருந்தால் குத்தி எடுத்துவிட வேண்டும்.
* தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உள்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று (நாப்தலின்) பாச்சை உருண்டைகளை (அ) அந்துப்பூச்சி உருண்டைகளை ஒரு கன்றுக்கு 3 என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒரு முறை வைத்து கன்றுகளை காண்டாமிருக வண்டின் தாக்குதலிலிருந்து தவிர்க்கலாம்.
* கருந்தலைப்புழு தாக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்துவிட வேண்டும்.
* கோடைகாலத்தில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் ஒரு எக்டருக்கு 300 பெத்திலிட் ஒட்டுண்ணி குளவி மற்றும் 4500 பிரோகனிட் குளவியை மரத்தில் விடவேண்டும்.
* வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத்தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து அல்லது போரேட் 10 சதம் குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய துளையிடப்பட்ட பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு அதை குருத்து மற்றும் மடல் பகுதிகளில் உள்ளிருந்து மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் காண்டாமிருக மற்றும் கூன் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
* வேர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து செலுத்தி கூன்வண்டு மற்றும் கருந்தலைப்புழு தாக்குதலை குறைக்கலாம். புதிய வேரை தேர்ந்தெடுத்து சிறிய கத்தியால் சாய்வாக வெட்டி பூச்சிக்கொல்லி மருந்து கரைசலான மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லியுடன் 10 மில்லி தண்ணீரை ஒரு பாலிதீன் பையில் இட்டு வேரை கரைசலின் உள்ளே விட்டு பாலிதீன் பையை நூல் கொண்டு கட்டவேண்டும். 24 மணி நேரத்திற்கு பிறகு கரைசல் உறிஞ்சப் பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அப்படி இல்லையென்றால் வேறு ஒரு வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். மருந்து செலுத்தியதிலிருந்து 45 நாட்கள் கழித்துதான் இளநீர் மற்றும் காய்களை பறிக்க வேண்டும்.
* வேர்மூலம் அசாடிராக்டின் 1 சதம் என்ற வேம்பு பூச்சிக்கொல்லியை 10 மி.லி. அளவில் 0 மி.லி. தண்ணீருடன் கலந்து செலுத்தி ஈரியோபைட் சிலந்தி தாக்குதலை குறைக்கலாம்.

No comments:

Post a Comment